மதுபானக் கூடம், உணவகங்களுக்குச் செல்லாதீர்: மக்களுக்கு ஜப்பான் அரசு வேண்டுகோள்
நாடு முழுவதும் இருக்கும் மதுபானக் கூடங்கள், கிளப்புகள், உணவகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
டோக்யோ: நாடு முழுவதும் இருக்கும் மதுபானக் கூடங்கள், கிளப்புகள், உணவகங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கரோனா வைரஸுக்கு எதிரானப் பணிகளை முன்னெடுக்கும் தேசிய படையுடன் ஆலோசனை நடத்திய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஜப்பானில் கரோனா தொற்று பெரும்பாலும் மக்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போதும், இரவில் நடக்கும் பொழுதுபோக்கு இடங்கள் மூலமாகத்தான் பரவுவதாகத் தெரிய வந்துள்ளது என்று கூறினார்.
ஜப்பானில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏப்ரல் 7ம் தேதி முதல் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், ரயில்களில் கூட்டத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஜப்பானில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆறு ஆயிரமாகவும், பலி எண்ணிக்கை 100 ஆகவும் உள்ளது.