அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தொழிலதிபர் பில் கேட்ஸ் உள்பட பல பிரபலங்களின் சுட்டுரை கணக்கை கடந்த ஜூலை 15 ஆம் தேதி கைப்பற்றி தவறாக பயன்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, தொழிலதிபர் பில் கேட்ஸ் உள்பட பல பிரபலங்களின் சுட்டுரை கணக்குகள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி கைப்பற்றப்பட்டு அவர்கள் கணக்கிலிருந்து தவறான செய்தி வெளியிட்டு மோசடி செய்யப்பட்டது.
கணக்கைக் கைப்பற்றியவர்கள் வெளியிட்ட செய்தியில், ஒரு பிட்காயின் கணக்கு கொடுக்கப்பட்டு இந்த கணக்கிற்கு நீங்கள் பிட்காயின் அனுப்பினால், அது உங்களுக்கு இரண்டு மடங்காக திருப்பி கொடுக்கப்படும் என வெளியிட்டனர்.
இந்த மோசடியை சுட்டுரை நிறுவனம் உடனே சரி செய்தது. பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபட்டது புளோரிடாவைச் சார்ந்த 17 வயதான கிரஹாம் இவான் கிளார்க் என்பது தெரியவந்துள்ளது. இவர் உயர்நிலைப் பள்ளி படிப்பு முடித்துள்ளார்.
தம்பா பகுதியில் உள்ள குடியிருப்பில் தனியாக வசித்து வந்த இவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த சிறுவன் மீது 30 க்கும் மேற்பட்ட இணைய மோசடி தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவருக்கு உதவியாக இருந்ததாக மேசன் ஜான் ஷெப்பர்ட் (வயது 19) மற்றும் நிமா பாசெலி (வயது 22) ஆகியோரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.