கராச்சியில் கோர விபத்து: விஷ வாயு கசிந்து 11 பேர் பலி; பலருக்கு உடல் நலன் பாதிப்பு
பாகிஸ்தானின் தெற்குப் பகுதி நகரான கராச்சியில் விஷ வாயுக் கசிந்ததில் 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கராச்சி: பாகிஸ்தானின் தெற்குப் பகுதி நகரான கராச்சியில் விஷ வாயுக் கசிந்ததில் 11 பேர் பலியாகினர். ஏராளமானோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சியின் கீமாரி பகுதியில் வசித்துவந்த பொதுமக்கள் திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறி மருத்துவமனைகளுக்கு விரைந்தனர்.
இது குறித்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விஷ வாயுக் கசிவு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
இது குறித்து விசாரித்து வரும் கராச்சி காவல்துறையினர், விஷ வாயுக் கசிவு குறித்து ஒரு துப்பும் துலங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.