முகப்பு
உலகம்

கொவைட்-19: குமரி மீனவர்கள் 700 பேர் உள்பட 900 இந்தியர்கள் ஈரானில் பரிதவிப்பு

ஈரானில் பணியாற்றி வந்த குமரி மீனவர்கள் 700 பேர் உள்பட மொத்தம் 900 இந்தியர்கள் கொவைட்-19 பாதிப்பு காரணமாக சிக்கி பரிதவித்து வருகின்றனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:01 PM
பகிர்:

ஈரானில் பணியாற்றி வந்த குமரி மீனவர்கள் 700 பேர் உள்பட மொத்தம் 900 இந்தியர்கள் கொவைட்-19 பாதிப்பு காரணமாக சிக்கி பரிதவித்து வருகின்றனர். தனி விமானம் மூலம் பத்திரமாக திரும்ப அழைத்துச் செல்லுமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்கள் மற்றும் சுற்றியுள்ள சிறிய தீவுகள் என்று சுமார் 900 இந்தியர்கள் மீன்பிடி தொழிலில் பணியில் உள்ளனர். இவர்களில் 700 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

இந்த நிலையில், ஈரானில் கொவைட்-19 (கரோனா வைரஸ்) பாதிப்பு அதிகளவில் பரவி வருவதாக குமரி மீனவர்கள் சமீபத்தில் தங்கள் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர். பணி செய்யும் நிறுவனங்கள் நாடு திரும்ப அனுமதி அளித்திருந்தாலும் விமான சேவை முற்றிலும் முடங்கியுள்ளதால் திரும்ப இயலவில்லை என்று தெரிவித்தனர். எனவே இந்திய அரசு தனி விமானம் மூலம் அனைவரையும் பத்திரமாக திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவும் காரணத்தால் உணவு கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாகவும், கிடைத்த உணவைக் கொண்டு படகில் பசியைப் போக்கிக்கொண்டிருப்பதாகக் கூறினர். 

இதையடுத்து ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களின் நிலை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக மீனவர் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் செயலர் சார்லஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் விமான சேவை பயன்படுத்த முடியாத சூழல் இருந்தால், கப்பல் மூலம் அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு வருவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரிரு நாளில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.