முகப்பு
உலகம்

சாத்தான்குளம் சம்பவத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது: எல்.முருகன்

சாத்தான்குளம் சம்பவத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் சந்தித்தார்.
பகிர்:

சாத்தான்குளம் சம்பவத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதிலும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு ரூ.1.75 லட்சம் கோடி சலுகைகளை வழங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு கடந்த 3 மாதங்களாக தலா ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இதைத் தவிர மத்திய அரசின் தொகுப்பில் இருந்து நியாயவிலைக்கடைகளில் அரிசி, பருப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் சுயசார்பு பாரதம் திட்டத்தில் தொழிலை ஊக்குவிக்க ரூ.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது என்றார். மேலும், அவர் பேசுகையில், சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் தவறு செய்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் தமிழக அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதையும், சிபிஐ விசாரணை கோரியுள்ளதையும் வரவேற்கிறோம்.

ஆனால் இந்த சம்பவத்தை திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அரசியலாக்கக்கூடாது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றார். இந்த சந்திப்பின்போது, பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன், கோட்டப் பொறுப்பாளர் பாயிண்ட் மணி, மாவட்டத் தலைவர் செந்தில்வேல், முன்னாள் மாவட்டத் தலைவர் சின்னசாமி உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →