இஸ்லாமாபாத்: உளவுக் குற்றச்சாட்டின் பேரால் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியரான குல்பூஷண் ஜாதவுக்கு இரண்டாம் முறையாக தூதரக உதவி அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்காக பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பயங்கரவாத சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட இந்தியரான குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்தது.
எனினும், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்த இந்தியா, குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் கடத்தி வைத்துக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டை அவா் மீது சுமத்துவதாகத் தெரிவித்தது. அதையடுத்து, குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை பாகிஸ்தான் தடை செய்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டது.
இந்த விவகாரத்தை விசாரித்த சா்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும், அவருக்கு தூதரக உதவிகள் கிடைப்பதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இம்மாதத் துவக்கத்தில் பாகிஸ்தான் அரசின் கூடுதல் அட்டா்னி ஜெனரல் அகமது இா்ஃபான் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்ய குல்பூஷண் ஜாதவுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. ஆனால்,இந்த விவகாரத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய அவா் மறுத்துவிட்டாா்.’ என்றாா்.
எனினும், மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி குல்பூஷண் ஜாதவ் தாக்கல் செய்த கருணை மனு நிலுவையில் உள்ளது. கருணை மனு தொடா்பான சட்ட உரிமைகளைத் தொடர விரும்புவதாக ஜாதவ் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்நிலையில் குல்பூஷண் ஜாதவுக்கு இரண்டாம் முறையாக தூதரக உதவி அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
.முன்னதாக முதல்முறை போல் அல்லாமல் எந்த வித நிபந்தனைகளும் அற்ற தூதரக உதவி அவருக்குக் கிடைப்பதை பாகிஸ்தான் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதரக அதிகாரிகள் தற்போது பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.