முகப்பு
உலகம்

தகவல் தொடர்பு அலுவலகம் தகர்ப்பு: வடகொரியா அதிரடி

கொரிய எல்லையில் அமைந்துள்ள வட மற்றும் தென் கொரியாவுக்கு பொதுவான தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவால் தகர்க்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

கொரிய எல்லையில் அமைந்துள்ள வட மற்றும் தென் கொரியா என இரு நாட்டுக்கும் பொதுவான தகவல் தொடர்பு அலுவலகம் வடகொரியாவால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. 

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே கடந்த சில ஆண்டுகளாக இணக்கமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது மீண்டும் மோதல் வெடித்துள்ளது. 

வடகொரியாவில் இருந்து தப்பிய சிலர் தென் கொரியாவில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் மூலமாக தங்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதாக வடகொரியா குற்றம் சாட்டி வந்தது.

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அவரது ஆட்சியை விமர்சிக்கும் வகையில் சிலர் தென் கொரியாவில் இருந்து ஹீலியம் பலூன்களை அனுப்புவதாகவும் வடகொரியாவில் இருந்து சில ரகசிய தகவல்கள் கசிவதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங், தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக பகிரங்க மிரட்டல் விடுத்தார். மேலும், எல்லையில் உள்ள தகவல் தொடர்பு அலுவலகத்தை மூடப்போவதாகவும் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி ராணுவத்துக்கு சில உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த நிலையில், கொரிய எல்லையில் அமைந்துள்ள இரு நாட்டுக்கும் பொதுவான தகவல் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளது. இத்தகவலை தென் கொரியாவும் உறுதி செய்துள்ளது. 

முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பின்போதுதான், பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த இந்த தகவல் தொடர்பு அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.