ஏழு நாடுகளில் மீண்டும் தீவிரமாகும் கரோனா பரவல்
உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த 10 நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.
புது தில்லி: உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக இருந்த 10 நாடுகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 நாடுகளில் கரோனா தொற்று மீண்டும் அதிகளவில் பரவத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் தினசரி கரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. உலகளவில் அமெரிக்கா, பிரேஸில், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் தீவிரமடைந்திருப்பது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் கரோனா தொற்றுப் பரவல் தொடர்பான விவரப் பட்டியலில் தெரிய வந்துள்ளது.
மற்ற மூன்று நாடுகளான இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகளில் மட்டும் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது.
Advertisement
குறிப்பாக அமெரிக்காவில் கரோனா தொற்று தீவிரமடைந்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த கால எண்ணிக்கைகளை எல்லாம் தாண்டி, தினசரி பாதிப்பு 1 லட்சம் முதல் 1.45 லட்சமாக உள்ளது.
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலுக்குப் பிறகு, அங்கு கரோனா பரவல் அதிகரித்திருப்பதையும் காண முடிகிறது.
புதன்கிழமையன்று, அமெரிக்காவில் மட்டும் கரோனாவுக்கு 1,479 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், அந்நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கையானது 1,134 ஆக உள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்தாலும், அது அனைத்து மாநிலங்களிலும் ஒன்றுபோல் காணப்படவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 44,879 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. 547 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 87.28 லட்சமாக உள்ளது.
இதுபோலவே, பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,47,660 ஆகவும், பலி எண்ணிக்கை 1,63,368 ஆகவும் உள்ளது.
இதில்லாமல், இத்தாலி, போலந்து, ஸ்பெயின், ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் நாள்தோறும் கரோனா தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.