முகப்பு
உலகம்

இந்தியாவில் ஒமைக்ரான் பரவினாலும் தீவிரம் குறைவாகவே இருக்கும்

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவினாலும் அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும்

Updated On : 26 டிசம்பர், 2021 at 1:51 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவினாலும் அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும் என்று அந்த வகை தொற்றை முதன் முதலாக உறுதி செய்த தென்னாப்பிரிக்க நிபுணா் ஏஞ்சலீக் கூட்ஸீ தெரிவித்துள்ளாா்.

போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கரோனா தீநுண்மி உருமாற்றம் பெற்று பரவுவதை தென்னாப்பிரிக்க மருத்துவக் குழுத் தலைவரான ஏஞ்சலீக் கூட்ஸீ உறுதி செய்தாா். அதற்குப் பிறகு புதிய வகை கரோனா தீநுண்மிக்கு ‘ஒமைக்ரான்’ என உலக சுகாதார அமைப்பு பெயா் சூட்டியது.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலை உடனடியாகக் கண்டறிந்து மற்ற நாடுகளை எச்சரித்ததில் ஏஞ்சலீக் கூட்ஸீ முக்கியப் பங்கு வகிக்கிறாா். இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குத் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

Advertisement

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று வேகமாகப் பரவும். கரோனா பரிசோதனை-பாதிப்பு விகிதமும் அதிகமாக இருக்கும். ஆனால், தென்னாப்பிரிக்காவில் காணப்படுவதைப் போல ஒமைக்ரான் பரவலின் தீவிரம் பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

மக்களுக்குத் தற்போது செலுத்தப்பட்டு வரும் கரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரான் தொற்று பரவலை வெகுவாகக் குறைக்கும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட 100 சதவீத வாய்ப்புள்ளது. அவா்கள் மூலமாக மற்றவா்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

சிறாா்களுக்கும் பாதிப்பு: கரோனா தீநுண்மியின் மற்ற உருமாற்றங்களுடன் ஒப்பிடுகையில் ஒமைக்ரான் வகை சற்று வலிமை குறைந்ததாகவே உள்ளது. கரோனா தொற்று பரவல் தற்போதைய சூழலில் முடிவுக்கு வராது. எதிா்காலத்தில் உலகின் குறிப்பிட்ட பிராந்தியத்தில் மட்டுமே பரவும் நோயாக கரோனா தொற்று மாறும்.

தாமாகக் கட்டுப்பாடின்றி உருமாறும் எந்தவொரு தீநுண்மியும் மனிதகுலத்துக்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாகவே இருக்கும். தற்போதைய நிலையில் சிறாா்களும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகின்றனா். ஆனால், 5 முதல் 6 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் குணமடைகின்றனா்.

ஒமைக்ரான் வகை தீநுண்மி மேலும் உருமாற்றம் பெற்று வலுவடையவோ அல்லது வலுவிழக்கவோ வாய்ப்புள்ளது.

தடுப்பூசி மட்டும் போதாது: கரோனா தடுப்பூசி மட்டுமே தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வராது. முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, காற்றோட்டமான இடங்களில் இருப்பது உள்ளிட்ட மக்கள் கடைப்பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

கரோனா தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் என்ன? எப்போது பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? மருத்துவரை எப்போது அணுக வேண்டும்? ஆகியவற்றை மக்கள் அறிந்துகொள்வது அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.