‘ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலி’: தொடரும் பட்டினிக் கொடுமை
உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் பலியாகிவருவதாக ஆக்ஸ்பாம் நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
உலக அளவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பட்டினியால் பலியாகி வருவதாக ஆக்ஸ்பாம் நடத்திய சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகளால் உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஆக்ஸ்பாம் நடத்திய ஆய்வில் கடந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் பசியால் வாடுபவர்களின் எண்ணிக்கை 2 கோடி அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
கரோனா அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகளவில் பட்டினியால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 11 பேர் பலியாகி வருவது தெரியவந்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் 15.5 கோடி மக்கள் வறுமை காரணமாக போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள ஆய்வு முடிவானது உலகின் 10 பணக்காரர்களின் செல்வம் கடந்த ஆண்டு மட்டும் 41,300 கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.
தொற்றுநோய் பரவல், காலநிலை மாற்றத்தால் உணவின்மை சிக்கல் அதிகரித்துவருவதாக கவலை தெரிவித்துள்ள ஆக்ஸ்பாம் ஆய்வு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் உணவுப் பொருள்களின் விலை 40% அதிகரித்துள்ளது ஏழை மக்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கலை உண்டு பண்ணுவதாக எச்சரித்துள்ளது.