பெகாஸஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆப்பிள்
ஆப்பிள் மென்பொருள், சாதனங்கள் ஆகியவற்றை பயன்படுத்த என்எஸ்ஒ நிறுவனத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரை வேவு பார்ப்பதற்காக பெகாஸஸ் என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு நாட்டில் அரசுகள் இந்த மென்பொருளை பயன்படுத்தி ஒருவரின் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெகாஸஸை தயாரித்த இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஒ மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. பெகாஸஸை பயன்படுத்தி குடிமக்கள் சட்டவிரோதமாக வேவு பார்க்கப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், ஆப்பிள் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் முன்னணி மொபைல்போன் நிறுவனமான ஆப்பிள், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் 1.65 பில்லியன் ஆப்பிள் போன்களை பயன்படுத்துவதிலிருந்து என்எஸ்ஒ நிறுவனத்தை முடக்கக் கோரி கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, இந்தாண்டு ஜனவரி மாதம் வரையில், 2020ஆம் ஆண்டில், 3.2 மில்லியன் ஐபோன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு, 1.7 மில்லியன் ஐபோன்கள் இறக்குமதி செய்யப்பட்டது. மற்ற ஆண்ட்ராய்டு போன்களை காட்டிலும், ஆப்பிள் போன்கள் பெகாஸஸின் எளிமையான இலக்காக மாறியுள்ளது என ஆய்வில் தெரியவந்தது. இது, ஆப்பிள் பயன்பாட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில், வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆப்பிள், "என்எஸ்ஒ குழுமம், எந்த ஆப்பிள் மென்பொருள், சேவைகள் அல்லது சாதனங்களைப் பயன்படுத்துவதிலிருந்து நிரந்தரத் தடை கோரியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
என்எஸ்ஒ நிறுவனத்தை அதிக அதிநவீன இணைய கண்காணிப்பு இயந்திரங்களை உருவாக்கிய மோசமான ஹேக்கர் என்றும் 21ஆம் நூற்றாண்டின் ஒழுக்கக்கேடான கூலிப்படை என்றும் ஆப்பிள் விமரிசித்துள்ளது.