மிகுந்த செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் தலிபான் தலைவர்
அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையில் முல்லா அப்துல் கனி பராதா் தலைமையிலான தலிபான் குழு கலந்து கொண்டது.
அமெரிக்காவைச் சோ்ந்த ‘டைம்ஸ்’ இதழ் வெளியிட்ட உலக அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 நபா்கள் பட்டியலில் தலிபான் அமைப்பின் இடைக்கால அரசில் துணை பிரதமராக பதவியேற்றுள்ள முல்லா அப்துல் கனி இடம்பெற்றுள்ளார். தோஹா ஒப்பந்தத்தில் உடன்படிக்கை ஏற்படுவதற்கு இவரே முக்கிய நபராக கருதப்படுகிறார்.
தோஹாவில் அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையின்போது அப்துல் கனி தலைமையிலான குழுதான் தலிபான் சார்பில் பங்கேற்றது. அமைதியான மனிதராகக் கருதப்படும் இவர் குறித்த பல தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அரிதாகவே அறிக்கைகளை வெளியிடுகிறார்.
அப்துல் கனி மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அங்கமாகவே, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர். முந்தைய ஆட்சியில் இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது, அண்டை நாடுகளை தொடர்பு கொள்வது, உறவை மேம்படுத்தும் வகையில் சீனா, பாகிஸ்தானுக்கு பயணம் என பல முக்கிய முடிவுகள் அப்துல் கனியை ஆலோசித்த பிறகே எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த 2010ஆம் ஆண்டு, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் அப்துல் கனி கைது செய்யப்பட்டார். இருப்பினும், ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றுவது என அமெரிக்கா முடிவு எடுத்த பின், அவர் விடுவிக்கப்பட்டார். தலிபான் அமைப்பின் இணை நிறுவனராகவும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்திருந்தபோதிலும், இடைக்கால அரசில் அவருக்கு ஏற்றார்போன்ற போதுமான அதிகாரம் கொண்ட பதவி வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
டைம்ஸ் இதழ் ஒவ்வோர் ஆண்டும் சா்வேதச அளவில் மிகுந்த செல்வாக்குள்ள 100 போ் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டுக்கான பட்டியலை புதன்கிழமை வெளியிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.