முகப்பு
உலகம்

இந்திய, அமெரிக்க உறவு புதிய உச்சத்தை தொடும்: பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டு நாடுகள்; ஒரே மாதிரியான விழுமியங்களையும் புவிசார் அரசியல் நலன்களையும் கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
மோடியுடன் கமலா ஹாரிஸ் சந்திப்பு
பகிர்:

அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல்முறையாக வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேசினார். வியூக ரீதியான இருநாட்டு உறவின் முக்கியத்துவம் குறித்தும் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்னைகள் குறித்தும் இருவரும் உரையாடினர்.

பின்னர், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மோடி, "இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டு நாடுகள். ஒரே மாதிரியான விழுமியங்களையும் புவிசார் அரசியல் நலன்களையும் கொண்டுள்ளோம்" என்றார். 

அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகள் என்பதை மேற்கோள் காட்டிய மோடி, இரு நாடுகளும் ஒரே மாதிரியான விழுமியங்களை பகிர்ந்து கொள்வதால் அமெரிக்கா, இந்திய நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதாக குறிப்பிட்டார்.

கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்த மோடி, "அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் இருநாட்டு உறவு புதிய உச்சத்தை தொடும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. உலகின் வாழும் பல மக்களுக்கு ஹாரிஸ் உத்வேகம் அளிக்கிறார்" என புகழாரம் சூட்டினார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "உலகம் கடும் சவால்களை சந்தித்த சமயத்தில், பைடனும், கமலாவும் அதிபராகவும் துணை அதிபராகவும் பதவியேற்று கொண்டனர். குறுகிய காலத்தில் கரோனா, பருவநிலை மாற்றம், குவாட் போன்றவற்றில் இருவரும் சாதனை படைத்திருக்கிறார்கள். 

துணை அதிபராக கமலா பொறுப்பேற்ற பிறகு அவரிடம் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கடுமையான கரோனா அலைக்கு எதிராக இந்தியா போரிட்ட சமயத்தில் நாங்கள் இருவரும் பேசினோம். அச்சமயத்தில், எங்களுக்கு ஆதரவு அளித்து அன்பாக நடந்து கொண்டதை நினைவு கூற விரும்புகிறேன்" என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →