பிலிப்பின்ஸில் பரவிய வதந்தியால் தடுப்பூசி மையம் முன் குவிந்த மக்கள்
பிலிப்பின்ஸில் கரோனா பொதுமுடக்கம் அமலாக உள்ள நிலையில் பரவிய வதந்தியால் மக்கள் தடுப்பூசி மையங்களின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிலிப்பின்ஸில் கரோனா பொதுமுடக்கம் அமலாக உள்ள நிலையில் பரவிய வதந்தியால் மக்கள் தடுப்பூசி மையங்களின் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிலிப்பின்ஸில் டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தொடங்கும் பொதுமுடக்கம் இரண்டு வார காலத்திற்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடக எல்லை மாவட்டங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்கு கரோனா நிவாரண நிதியை பெற முடியாது மற்றும் பொதுமுடக்க காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வர அனுமதி மறுக்கப்படும் என்கிற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதனை உண்மை என நம்பிய மக்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டி தலைநகர் மனிலாவில் உள்ள தடுப்பூசி மையங்களின் முன் திரண்டனர். தனிமனித இடைவெளி உள்ளிட்ட எந்தவித கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படாமல் மக்கள் குவிந்ததால் அதிகாரிகள் அவர்களைக் கலைக்க சிரமப்பட்டனர்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு
அதிகப்படியான மக்கள் கூடியதால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்திவைக்கப்பட்டது.
கடந்த வாரம் பொதுமுடக்கத்தை அறிவித்த அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தடுப்பூசி போட மறுப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவித்தது வதந்தி பரவக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.