சகோதரர் பசில் ராஜபட்ச பதவி பறிப்பு: கோத்தபய நடவடிக்கை
இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் நிதித் துறை அமைச்சரும் தன்னுடைய சகோதரருமான பசில் ராஜபட்சவைப் பதவியிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபட்ச நீக்கியுள்ளார்
கொழும்பு: இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில் நிதித் துறை அமைச்சரும் தன்னுடைய சகோதரருமான பசில் ராஜபட்சவைப் பதவியிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபட்ச நீக்கியுள்ளார்.
தற்போதைய வெளியுறவு செலாவணி பிரச்னையைக் கையாள்வதற்காக இலங்கைக்கு உதவுவதற்கான இந்திய பொருளாதார உதவிகள் தொடர்பாக பசில்தான் பேச்சு நடத்திவருகிறார்.
தவிர, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான நிதியுதவித் திட்டம் பற்றி விவாதிப்பதற்காக பன்னாட்டு நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக அமெரிக்கா புறப்பட்டுச் செல்லவும் பசில் ராஜபட்ச திட்டமிட்டிருந்தார்.
பசில் ராஜபட்ச இருந்த நிதித் துறை அமைச்சர் பொறுப்பில் தற்போது நேற்று வரை நீதித் துறை அமைச்சராக இருந்த அலி சாப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையின் 26 அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் காபந்து அரசு அமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இவர்களில் நான்கு பேர் புதிய முகங்கள் ஆவர்.