உலகம்

இலங்கை அனைத்துக் கட்சி கூட்டம்: மேலும் 2 நாள்கள் விவாதம்

DIN

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மேலும் 2 நாள்கள் விவாதம் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

மேலும், இலங்கையில் மக்களின் நிலை கண்டு, பிரதமர் மகிந்த ராஜபட்சவைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்த நிலையில், அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைய அதிபர் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தார். அதன்படி புதிதாக 4 அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆனால், பதவியேற்று 24 மணி நேரத்திற்குள்ளாக நிதியமைச்சர் அலி சப்ரி ராஜிநாமா செய்தார். 

மேலும், 42 எம்.பி.க்கள் அரசுக்கு வழங்கும் தங்களுடைய ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும் தனித்து செயல்பட உள்ளதாகவும் கூறுவதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் பிற்பகல் 3 மணியளவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில், நாளை(ஏப்ரல்-6) மற்றும் நாளை மறுநாளும் (ஏப்ரல்-7) விவாதம் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அவைத் தலைவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மகிந்த ராஜபட்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில், இலங்கையில் அதிபர் ஆட்சிக்கு அதிகாரம் அளிக்கும் நடைமுறையை கைவிட்டு பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரம் வழங்கும் 19 ஆவது சட்டதிருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதும் எதிர்க்கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT