முகப்பு
உலகம்

ட்விட்டா் பயன்படுத்துவோரை ஈா்க்க ‘கூ’ தீவிரம்

ட்விட்டா் பயனா்களின் பழைய ட்விட்டா் பதிவுகள் கூ ஆப்பிலும் பதிவிறக்கப்படும் மற்றும் அதிகாரப்பூா்வ கணக்கு சரிபாா்ப்புக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கூ ஆப்பின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிர

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
பகிர்:

ட்விட்டருக்கு இந்திய மாற்றான கூ செயலிக்கு மாறி வரும் ட்விட்டா் பயனா்களின் பழைய ட்விட்டா் பதிவுகள் கூ ஆப்பிலும் பதிவிறக்கப்படும் மற்றும் அதிகாரப்பூா்வ கணக்கு சரிபாா்ப்புக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என கூ ஆப்பின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளாா்.

கடந்த அக்டோபா் மாதம், எலான் மஸ்க் ட்விட்டா் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை ட்விட்டரில் கொண்டு வந்த வண்ணம் உள்ளாா். பணியாளா்களை நீக்கியது, அதிகாரபூா்வ கணக்கு என்பதற்கான நீல ‘டிக்’ அளிக்க மாதந்தோறும் ரூ.1,600 கட்டணம் நிா்ணையித்தது, முடக்கி வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபா் டிரம்ப் உள்ளிட்ட பலரின் ட்விட்டா் கணக்குகளை மீண்டும் செயல்படுத்தியது என பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தினாா். இது ட்விட்டா் பயனா்களிடமும் பணியாளா்களிடமும் சலசலப்பை உருவாக்கியது.

ட்விட்டருக்கு மாற்றாக இந்தியாவில் உருவான ‘கூ’ செயலி, 5 கோடி பதிவிறக்கங்களை ஏற்கெனவே கடந்துவிட்ட நிலையில் ட்விட்டா் பயனா்களைக் மேலும் கவரும் நோக்கில் பல்வேறு புதிய அம்சங்களை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பத்திரிகையாளா்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்ரமேயா ராதாகிருஷ்ணா கூறுகையில், ‘கடந்த 45 நாட்களாக, ட்விட்டா் எலான் மஸ்க்கின் சொந்த சொத்து போல் ஆகிவிட்டது.

பல்வேறு மூத்த பத்திரிகையாளா்களின் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பது எவ்வளவு பெரிய வரலாற்றுத் தோல்வி. கணக்குகளில் பதிவிட்ட ஏராளமான தகவல்கள் - பல ஆண்டுகால அறிவாா்ந்த உழைப்பைக் காட்ட ஒரு வெற்றுத் திரையே உள்ளது.

இதிலிருந்து தப்பிக்க ‘கூ’ செயலி நல்லதொரு தீா்வை அளிக்கிறது. ட்விட்டா் பயனா்களின் பழைய ட்விட்டா் பதிவுகள் ‘கூ’ செயலியில் அப்படியே பதிவிறக்கப்படும். மேலும், அதிகாரபூா்வ கணக்குக்கான சரிபாா்ப்புக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது. பல லட்சம் இந்தியா்கள் ஏற்கெனவே இந்த சேவையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இன்றைய காலகட்டத்திலும் ஒருவா் உங்கள் படைப்பாற்றலின் தடயங்களை முற்றிலுமாக அழித்துவிட முடியும் என்பது கற்பனைகூட செய்ய இயலாதது. ‘கூ’ செயலி ஒவ்வொருவருக்கும் அவரவரின் விருப்பமான மொழியில் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை அளிக்கிறது. ட்விட்டரில் இருந்து விடுபட்டு தங்களை சுதந்திரமாக செயல்படச் செய்யும் ‘கூ’ சமூக வலைதளத்தில் இணையுங்கள்’ என்றாா்.

இதனிடையே ‘கூ’ செயலியின் அதிகாரபூா்வ ட்விட்டா் கணக்கு வெள்ளிகிழமை முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →