உலகம்

ஒரே அழைப்பில் 900 பேரை நீக்கம் செய்து சர்ச்சை: மீண்டும் அலுவலகம் திரும்பும் சிஇஓ

DIN

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் பெட்டர் டாட் காம். இணையம் வழியாக வீட்டின் உரிமையாளர்களுக்கு கடன், காப்பீடு உள்ளிட்ட சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இந்திய வம்சாவளியான விஷால் கர்க் என்பவர் பணியாற்றிவருகிறார். அந்நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 900 பேரை ஒரே விடியோ காலில் இவர் வேலையை விட்டு நீக்கியது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

இதையடுத்து விஷால் கர்க் தனது செயலுக்குப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டார். 900 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பது தனது முடிவு என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் அந்நிறுவனத்தின் 3 உயர் அலுவலர்கள் தாங்களாக முன் வந்து பதவியை ராஜிநாமா செய்தனர். ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் விஷால் கர்க் குறித்து விமரிசனம் மேற்கொண்டனர்.

இச்சூழலில், விஷால் கர்க்கை தற்காலிக விடுப்பில் அந்நிறுவனம் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியானது. நிறுவனத்தின் தலைமை நிதி அலுவலராக உள்ள கெவின் ரியான் அன்றாட பணிகளைக் கவனிப்பார் என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், விடுப்பு முடிந்து அவர் பணிக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனம் சார்பில் பணியாளர் ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், "தன்னுடைய தலைமை பண்பு, விழுமியங்களை மேம்படுத்தி நிறுவனத்தை சிறப்பாக்காவும் நிர்வாக குழுவினரிடம் இணக்கமாக செயல்படவும் விஷால் கர்க் விடுப்பில் சென்றிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

முக்கியமான காலக்கட்டத்தில் தொலைநோக்கு பார்வை, கவனம், தலைமை ஆகியவற்றில் மாற்றம் மேற்கொள்வதாக அவர் உறுதி அளித்தார். அவர் மீதும் அவரது உறுதிமொழி மீதும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணியாளர்களுக்கு கர்க் அனுப்பிய கடிதத்தில், "கடந்த சில வாரங்கள் எவ்வளவு கடினமாக இருந்தன என்பது எனக்குப் புரிகிறது. எனது செயல்களால் ஏற்பட்ட மனக்கசப்பு, கவனச்சிதறல் மற்றும் சங்கடத்திற்காக நான் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.

ஒரு நிறுவனமாக நாம் எங்கே இருக்கிறோம், சிறந்த தலைமைத்துவம் என்ன? நான் எப்படிப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என்பது பற்றி யோசித்து நிறைய நேரம் செலவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT