முகப்பு
உலகம்

இலங்கை அதிபர் தேர்தல்: வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக சஜித் பிரேமதாச அறிவிப்பு

இலங்கை அதிபர் பதவிக்கான தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:50 AM
பகிர்:

இலங்கை அதிபர் பதவிக்கான தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். 

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபட்ச சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். 

இதையடுத்து இலங்கையில் புதிய அதிபரை தேர்வு செய்ய வாக்குப்பதிவு நாளை(புதன்கிழமை) நடைபெற உள்ளது. 

அதிபர் தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச, மாா்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவா் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும ஆகியோா் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். 

இதனிடையே, இலங்கை அதிபர் தேர்தலுக்கான தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் மிகவும் நேசிக்கும் எனது நாட்டிற்கும், எனது மக்களின் நலனுக்காகவும் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன். மேலும் தனது சமகி ஜன பலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி), கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  டலஸ் அழகப்பெரும-வை வெற்றிபெற உழைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம் தொடர்வதால், இலங்கையில் மீண்டும் அவசர நிலையை ரணில் திங்கள்கிழமை அறிவித்தாா். 

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது ஜனநாயக விரோதச் செயல் என எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.