இலங்கை மின்சார வாரியத் தலைவர் ராஜிநாமா! அரசின் அழுத்தம் காரணமா?
இலங்கை மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இலங்கை மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே தொடர் அரசியல் குழப்பங்களும் நீடித்து வருகின்றன.
அந்த வகையில் இலங்கையில் மன்னார் பகுதியில் இரண்டு காற்றாலை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டமிடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காற்றாலை அமைக்கும் டெண்டரை அதானி குழுமத்திற்குத் தர, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்பேரில் அதிபர் கோத்தபய ராஜபட்ச மூலமாக தனக்கு அழுத்தம் தரப்பட்டதாக மின்சார வாரியத் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ சமீபத்தில் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இதற்கு மறுப்பு தெரிவித்தார்.
அதன்பின்னர் மன உளைச்சல் காரணமாக, தான் இவ்வாறு தெரிவித்து விட்டதாகவும் தான் கூறியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் பெர்டினாண்டோ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மின்சார வாரியத் தலைவர் பதவியை பெர்டினாண்டோ இன்று ராஜிநாமா செய்துள்ளார்.
அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாகவும் மின்சார வாரியத்தின் புதிய தலைவராக நளிந்த இளங்கோகோன் நியமிக்கப்பட உள்ளதாகவும் மின்சார வாரியத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்திற்குத் திட்டத்தைத் தர அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக பெர்டினாண்டோ ராஜிநாமா செய்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.