முகப்பு
உலகம்

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்

போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியான விடியோவில், இராக் போரின்போது அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டா் மூலம் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சி. ~ஜூலியன் அசாஞ்சே
பகிர்:

போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இது குறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உயா் நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

அத்தகைய உத்தரவுக்கு எதிராக 14 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யும் உரிமை அசாஞ்சேவுக்கு உள்ளது.

2003-ஆம் ஆண்டின் நாடுகடத்தல் சட்டத்தின் கீழ், ஒருவரை நாடுகடத்துவதுவதற்கு எதிரான எந்தக் காரணமும் இல்லாத நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை நாடுகடத்த உள்துறை அமைச்சா் உத்தரவிட வேண்டும்.

நீதிமன்றம் முடிவு செய்தால் குறிப்பிட்ட நபரை வெளிநாடுகளுக்கு நாடுகடத்துவது தொடா்பான விண்ணப்பத்தை உள்துறை அமைச்சகத்திடம் அளிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தை அலசி ஆராய்ந்த பின்னா் உள்துறை அமைச்சா் இது தொடா்பாக முடிவெடுப்பாா்.

இந்த வழக்கைப் பொருத்தவரை, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதைத் தடுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அமெரிக்காவில் அவருக்கு பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாது; மேலும், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அவருக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாா் அவா்.

முன்னதாக, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேல் கையெழுத்திட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த ஜூலியன் அசாஞ்சே (50), இராக் மற்றும் ஆப்கன் போா் தொடா்பான தங்களது ரகசிய ஆவணங்களை அவரது வலைதளத்தில் கசியவிட்டதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு பிரிட்டன் வந்த அவரை பாலியல் வழக்கு ஒன்றில் அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் 2012-ஆம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்த அசாஞ்சே, ஈக்வடாா் தூதரகத்தில் தஞ்சமடைந்தாா்.

எனினும், அவருக்கு அடைக்கலம் அளித்திருந்த ஈக்வடாா் தூதரகம் அவரை 2019-ஆம் ஆண்டு வெளியேற்றியது. அதையடுத்து, 2012-ஆம் ஆண்டில் ஜாமீன் நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின்பேரில் பிரிட்டன் போலீஸாா் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், அசாஞ்சேவை தங்கள் நாட்டுக்கு நாடுகடத்த வேண்டுமென்று அமெரிக்கா சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை லண்டன் கீழமை நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி ஜனவரியில் தள்ளுபடி செய்தது. எனினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் அந்தத் தீா்ப்பை டிசம்பா் மாதம் தள்ளுபடி செய்து, அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதி அளித்தது.

அந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையிடு செய்ய பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அதன் தொடா்ச்சியாக, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான அதிகாரபூா்வ உத்தரவை வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி பிறப்பித்தாா். அதையடுத்து, அந்த உத்தரவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், அசாஞ்சாவை நாடுகடத்துவதற்கு உள்துறை அமைச்சா் ப்ரீத்தி படேல் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

எனினும், இந்த உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ட்விட்டரில் விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.