இதுவரை 7.8 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து எல்லையைக் கடந்து தங்கள் நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக போலந்து அரசு அறிவித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையேயான போரில் சிக்கிக் கொண்ட பல்வேறு நாட்டு மக்களும் தங்களது நாடுகளுக்கு திரும்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ரஷிய போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று வருகின்றனர். உக்ரைனில் பல்வேறு காரணங்களுக்காக தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற கடுமையாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிரமோஸ் வகை ஏவுகணை சோதனை வெற்றி
உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து தங்களது சொந்த நாட்டுக்கு செல்கின்றனர். இந்நிலையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்து, பிப்ரவரி 14ஆம் தேதி முதல் இதுவரை 7,87,300 பேர் உக்ரைன் எல்லையிலிருந்து தங்கள் நாட்டிற்குள் அடைக்கலம் தேடி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அவர்களில் 1,06,400 பேர் பத்திரமாக அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலந்து அரசு குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | மணிப்பூரில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.77% வாக்குகள் பதிவு
முன்னதாக போலந்துக்குள் நுழைய முயற்சிக்கும் இந்தியா்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவா்களை ருமேனியாவுக்குச் செல்லுமாறு போலந்து அதிகாரிகள் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் உக்ரைனில் பரிதவிக்கும் இந்தியா்களை மீட்க போலந்திலிருந்து சில விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகவும், போலந்து வரும் அனைத்து இந்தியா்களுக்கும் உணவு, இருப்பிடம் வழங்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.