மகன்தான் வேண்டும்; பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற தந்தை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு மகன்தான் வேண்டும் என்று கூறி, பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு மகன்தான் வேண்டும் என்று கூறி, பிறந்து 7 நாள்களே ஆன மகளை சுட்டுக் கொன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானின் மியான்வாலி பகுதியில், கடந்த ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதிதான், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சொந்த ஊராகும்.
ஷாஷ்சாயிப் கான் - பாத்திமா தம்பதிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த வாரம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்தது குறித்து அறிந்த கான், தனது மனைவி மற்றும் மகளை தொடர்ந்து வசைபாடி வந்துள்ளார்.
இது குறித்து பாத்திமா கூறுகையில், இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு போனவர் ஞாயிறன்றுதான் வந்தார். முதலில் என்னை கடுமையாக திட்டினார். பிறகு குழந்தையை சபித்தார். திடீரென துப்பாக்கியை எடுத்து குழந்தையை நோக்கிச் சுட்டார் என்கிறார் கண்ணீருடன்.
எனது கணவர் ஆரம்பத்திலிருந்தே மகன்தான் வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்காக இப்படி ஒரு குற்றத்தை செய்வார் என்று யாருமே நினைக்கவில்லை என்று கூறினார். இது குறித்துகாவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை தேடி வருகிறார்கள்.