கடந்த 2018ஆம் ஆண்டு, ஆட்சி அமைத்ததிலிருந்து இதுவரை சந்தித்திராத கடுமையான சவாவை எதிர்நோக்கியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி கொள்வதன் மூலம் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை கடந்து ஒன்று சேர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைமையிலான கூட்டணியிலிருந்து சில எம்பிக்கள் வெளியேறிய நிலையில், பெரும்பான்மையை இழுந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கிடையே, பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலக வேண்டும் என எதிர்கட்சயினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை மறுத்த இம்ரான் கான், "என்ன நடந்தாலும் ராஜிநாமா செய்ய மாட்டேன்" என புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
போராடாமல் சரணடைய போவதில்லை என்றும் நேர்மையற்றவர்களிடமிருந்து கொடுக்கப்படும் அழுத்தத்திற்காக ஏதற்கு பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 15 அம்ச திட்ட நிரலை தேசிய நாடாளுமன்றத்தின் தலைமைச் செயலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், நம்பிக்கை தீர்மானமும் இடம்பெற்றுள்ளது.
பொருளாதாரத்தை தவறாக கையாண்டது, பணவீக்கம் இரட்டை இலக்கை எட்டியது, விலைவாசி உயர்வு ஆகியவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இம்ரான் கானுக்கு அரசியல் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, எதிர்கட்சியினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் அவர்களை ஒன்றிணைத்துள்ளது. இம்ரான் கான் பிரதமரான பிறகு, பல அரசியல் தலைவர்கள் பல்வேறு கால கட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பணவீக்கைத்தை கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி இம்ரான் கானுக்கு எதிராக சொந்த கட்சியை சேர்ந்த 20 எம்பிக்களே வாக்களிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் அதே சமயத்தில் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்.
342 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 172 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாப் கூட்டணிக்கு 179 உறுப்பினர்கள் உள்ளனர். இம்ரான் கானின் கட்சிக்கு மட்டும் 155 உறுப்பினர்கள் உள்ளனர்.
இதையும் படிக்க | 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரி விலக்கு கேட்ட பாஜக...சட்டப்பேரவையை கலகலக்க வைத்த கேஜரிவாலின் பதில்
ஆனால், ஆளும் கூட்டணியை சேர்ந்த மூன்று முக்கிய கட்சிகள், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்கட்சிகளுடன் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளிடம் 163 உறுப்பினர்கள். ஆளும் கூட்டணி கட்சி எம்பிக்களும் இம்ரான் கானின் சொந்த கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்பிக்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்கும் பட்சத்தில், இம்ரான் கான் அரசு எளிதாக கவிழ்ந்துவிடும்.
பாகிஸ்தான் வரலாற்றிலேயே, இதுவரை எந்த பிரதமரும் தனது ஐந்தாண்டு கால ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்ததில்லை. இதற்கு மத்தியில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.