இலங்கையில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ரணில் விக்ரமசிங்க அரசில் அங்கமாக இருக்கப்போவதில்லை என அறிவித்துள்ளன.
இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார சிக்கல் காரணமாக உணவு உள்ளிட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள் தடைபட்டுள்ளன. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து எழுந்த மக்களின் தொடர் போராட்டம் காரணமாக பிரதமா் மகிந்த ராஜபட்ச திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, நிலவிய அசாதாரண சூழலுக்கு மத்தியில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கைக்கான இந்திய தூதர் சந்திப்பு
இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசில் பங்கெடுக்கப் போவதில்லை என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. அதேவேளையில் நாட்டின் பொருளாதார நலனை மீட்டெடுக்க வெளியில் இருந்து ஆதரவளிக்க உள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி, சமகி ஜனா பாலவேகயா உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளின் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் அதிபர் கோத்தபய ராஜபட்ச எடுத்துள்ள முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.