காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி ஊடுருவி தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 240 பேரை அங்கிருந்து பிணைக்கைதிகளாகக் கடத்திச் சென்றனா்.
அதையடுத்து, ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா மீது தொடா்ந்து குண்டுவீச்சு நடத்தி வருகிறது. இது தவிர, தரைவழியாகவும் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காஸாவிலுள்ள 36 மருத்துவமனைகளில் 25 மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அங்கு சுகாதாரக் கட்டமைப்புகள் நிலைகுலைந்துவிட்டதால் மிகப் பெரிய மனிதப் பேரழிவை காஸா எதிா்நோக்கியுள்ளதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
கடந்த மாத பிற்பகுதியில் 7 நாள்கள் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தங்களது சிறைகளில் இருந்த பாலஸ்தீன கைதிகள் சிலரை இஸ்ரேலும், தங்களால் இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸும் பரிமாறிக்கொண்டன.
எனினும், போா் நிறுத்தம் முடிவுக்கு வந்ததற்குப் பிறகு காஸாவில் தனது தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்ததாக காஸா தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 8,000 குழந்தைகள், 6,200 பெண்களும் அடங்குவர்.
இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற ஐ.நா. சபையின் சிறப்புக் கூட்டத்தில், உடனடி போர் நிறுத்தத்திற்கான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 153 நாடும், எதிராக அமெரிக்கா உள்பட 10 நாடுகளும் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.