பெஷாவர் மசூதியில் குண்டு வெடிப்பு: 28 பேர் பலி; 150 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவரகளின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவரகளின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. 150க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மனித வெடிகுண்டாக வந்த நபர், மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து பேசிய பெஷாவர் நகர ஆணையர் ரியாஸ் மெஹ்சூத், மசூதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்குத் தேவையான முழு சிகிச்சையும் அளிக்கப்படும். பெஷாவர் பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களின் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
மசூதியில் தொழுகையின்போது முன் வரிசையில் இருந்த நபரின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது மசூதியில் 120க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தற்கொலைப்படையின் இந்த கொடூர செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.