இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிவடைந்த பிறகு காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை இஸ்ரேல் ஏற்கவுள்ளதாக பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்த்துள்ளதாக அமெரிக்காவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி பேசும்போது, “காஸாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது சரியான ஒன்றல்ல. இஸ்ரேலும் அமெரிக்காவும் நண்பர்கள். அதனாலேயே அவர்களின் எல்லா வார்த்தைகளையும் நாங்கள் அங்கீகரிக்க வேண்டியதில்லை. நெதன்யாகு மற்றும் பைடன் எல்லா பிரச்சனைகளிலும் ஒரே போல முடிவு எடுத்ததில்லை. ஹமாஸின் வழியைப் பின்பற்றாதவர்களால் காஸா நிர்வகிப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: பெண்களை வைத்து பாலஸ்தீனர்களைக் கைது செய்யும் இஸ்ரேல்!
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியது, “இஸ்ரேல் கால வரையின்றி காஸாவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும். நாம் பார்த்தோம், அப்படி இல்லாத சூழலால் என்ன நடந்தது என்று. அப்படியான பாதுகாப்பு பொறுப்பு இல்லாததால் ஹமாஸின் பயங்கரவாதம் நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு வெடித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
ஒவ்வொரு பிரச்சனையிலும் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒத்து போக வேண்டும் என்பதில்லை என செய்தியாளர்களிடம் கிர்பி தெரிவித்தார்.