இறப்பு இன்னும் சில நிமிட தூரத்தில்...: காஸா மருத்துவமனை தாக்குதல்!
காஸாவில் உள்ள அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகே தொடர் சண்டை நடந்து வருகிறது.
காஸாவின் பிரதான மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனைக்கு அருகேயும் மருத்துவமனை வளாகத்திலும் இஸ்ரேலின் தாக்குதல் நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கிறது.
1500-க்கும் மேற்பட்ட நோயாளிகளும் 1500 மருத்துவ குழுவினரும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்களும் மருத்துவமனையில் உள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வெளியேறுபவர்கள் தாக்கப்படுவதாகவும் சுற்றிலும் இஸ்ரேலின் ட்ரோன்கள் பறந்தவண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே நீர், உணவும் எரிபொருள் இல்லாத நிலையில் மின்சாரம் முற்றிலும் தடைப்பட்டு விட்டது. அதனால் 5 பேர் இறந்துள்ளனர். குழந்தைகளுக்கான இன்குபேட்டர்கள் இயங்காததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் இருளிலும் அச்சத்திலும் உறைந்திருப்பதாகவும் இறப்பு இன்னும் சில நிமிடங்களில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவம் இந்த மருத்துவமனை, ஹமாஸின் கட்டுபாட்டு அறையாகவும் புகலிடமாகவும் உள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது.
இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 11,070 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.