500 பேர் பலி: காஸா மருத்துவமனை தாக்குதலுக்கு யார் பொறுப்பு?
காஸா மருத்துவமனை தாக்குதலில் 500-க்கும் அதிகமான பேர் இறந்துள்ளதாகப் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய காஸாவில் உள்ள பேப்டிஸ்ட் அரபு தேசிய மருத்துவமனையின் மீதான தாக்குதலில் 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு, இஸ்ரேலின் விமானத் தாக்குதல் தான் காரணம் என காஸாவின் அமைச்சகம் தெரிவிக்கிறது.
ஆனால், இந்த சம்பவத்துக்கு தாங்கள் காரணமில்லை என இஸ்ரேல் மறுப்பதோடு பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத குழு ஏவிய கணை, இலக்கு தவறி மருத்துவமனையைத் தாக்கியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை உயிர் பலிகள்:
இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பித்த நாளிலிருந்து ஒரே தாக்குதலில் அதிகபட்ச உயிர் பலிகள் ஏற்பட்டிருப்பது இந்த முறை தான்.
மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட குறைந்தது 500 பேராவது இறந்திருக்கக்கூடும். கட்டடக் குவியலுக்குள் சிக்கியிருக்கும் நபர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கும்.
இவர்களில் பெரும்பாலனோர் இடப்பெயர்வில் தஞ்சமடைந்தவர்கள்.
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் மை அல்கைலா(Mai Alkaila) இந்த சம்பவத்தை படுகொலை என விமர்சிக்கிறார்.
மத்திய காஸாவில் அமைந்திருக்கும் இந்த மருத்துவமனை ஜெருசலேம் மறைமாவட்ட ஆயர் பேரவையால் நடத்தப்படுகிறது.
இதையும் படிக்க: இஸ்ரேலின் சிதைந்த ஈகோவும் நெதன்யாகுவின் இழந்த செல்வாக்கும்: தொடரும் காஸா தாக்குதலின் பின்னணி!
ஜிகாத்தின் பதில்
மருத்துவமனை தகர்ப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் குழு மறுக்கிறது.
இஸ்லாமிக் ஜிகாத் அமைப்பு, ”இது இஸ்ரேல் நிகழ்த்திய கொடூரமான படுகொலை. இதற்கான பொறுப்பில் இருந்து தப்பிக் கொள்ள அவர்கள் புனையும் பொய்தான் எங்கள் மீது குற்றம் சுமத்துவது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளது.
ஜோ பைடனின் ஆதரவு
இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் ஈடுபடவில்லை. இன்னொரு அணி செய்திருக்கிறது. அமெரிக்காவின் சார்பில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரிக்கப்படும் என ஜோ பைடன், நெதன்யாகு உடனான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது: இஸ்ரேலில் ஜோ பைடன்
உலக நாடுகளின் கண்டனம்
ஜோர்தானில் நடைபெறவிருந்த அரபு தலைவர்களுடனான அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சந்திப்பை ரத்து செய்துள்ளது ஜோர்தான்.
இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை நாடுகள் தொடங்கி மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு எகிப்து, செளதி அரேபியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.