காஸா தரப்பு உயிரிழப்பு எண்ணிக்கையில் தனக்கு நம்பிக்கையில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் படையினர் எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது கடந்த அக். 7-ல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸா மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வருவதால் காஸா நகரம் முழுவதும் உருக்குலைந்துள்ளது.
இந்த போரில் காஸா தரப்பில் 7,028 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் 2,900 பேர் சிறுவர்கள் என்றும் ஹமாஸ் கூறியுள்ளது.
இதையும் படிக்க | இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல்: இந்தியாவின் பொருளாதார வழித்தடதிட்டத்துக்கு எதிராக இருக்கலாம்: ஜோ பைடன்
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தீவிரவாதக்குழுவான ஹமாஸ் கூறும் உயிரிழப்பு எண்ணிக்கையில் தனக்கு நம்பிக்கையில்லை என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய பைடன், 'இஸ்ரேல் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என பாலஸ்தீனியர்கள் கூறுவதில் நம்பிக்கை இல்லை. ஆனால், அங்கு அப்பாவிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒரு போரை நடத்துவதற்கான விலை' என்று கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்கு எதிரான போரை பிரசாரம் செய்யும் மக்களிடையே இஸ்ரேல் இனி கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா - மத்திய கிழக்கு பொருளாதார வழித்தடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிராக இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதப் படையினா் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என ஜோ பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | காஸாவில் உயிரிழப்பு 7,000 -யைத் தாண்டியது!