பாலஸ்தீன ஆதரவாளர்கள் காஸாவில் நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்தக் கோரி அமெரிக்காவின் முக்கிய இணைப்பு பாலங்கள், நெடுஞ்சாலைகள், விமான நிலைய சாலைகளில் திங்கள்கிழமை, பொருளாதார முற்றுகையின் பகுதியான சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிகாகோவில் ஓ’ஹேர் பன்னாட்டு விமான நிலையத்துக்கு செல்லும் சாலையை காலை 7 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். விமான நிலையத்துக்கு செல்லவிருந்த பயணிகள் இதனால் நீண்ட நேரம் நெரிசலில் சிக்க நேர்ந்தது. பலர் தங்கள் கார்களை விடுத்து நடந்து விமான நிலையத்துக்கு சென்றதாக ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல சான் பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியிலும் பல மணி நேரங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டன் கேட் பாலத்தில் ‘காஸாவுக்காக இந்த உலகம் நிற்கட்டும்’ என்கிற பதாகைகளை போராட்டக்காரர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
நியூ யார்க், கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மற்றும் ஒரேகான் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்றன.
ஈரான், இஸ்ரேல் மீது 300 ஏவுகணைகளை வீசியதற்கு மறுநாள் அமெரிக்காவில் இந்த போராட்டங்கள் வெடித்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க ராஜ்ய மற்றும் ஆயுத உதவிகள் அளித்து வருகிறது.
நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களில் ஈடுபட்ட ஏராளமான பாலஸ்தீன ஆதரவாளர்களை அமெரிக்க காவல் துறை கைது செய்தது. சில மணி நேரங்களுக்கு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.