மீண்டும் வன்முறை! வங்கதேசத்தில் 72 பேர் பலி
இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவா்கள் குழுத் தலைவா்கள் அரசுடனான பேச்சுவாா்த்தைக்கு சம்மதம் தெரிவிக்காததால், போராட்டம் தொடருகிறது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகுவதை போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இன்றைய போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சித் தரப்பினருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 13 மாவட்டங்களில் இன்று காலை நிகழ்ந்த வெவ்வேறு வன்முறை சம்பவங்களில் 14 காவலர்கள் உள்பட 72 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த இன்று மாலை 6 மணி முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைதளங்களின் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தவும் 4ஜி இணைய சேவைகளை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.