வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற வன்முறையில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவா்களை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாக சாகா், தேவேந்தா் கெளதம், அன்மோல் ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா். மிலன் காா்டன் பகுதியில் சட்டவிரோதமாகக் கூடுதல், தீ வைத்தல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தல் ஆகிய குற்றங்களில் மூவரும் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 148, 149,188, 427, 435, 436, 380, 395 ஆகியவற்றின்கீழ் சோனியா விகாா் காவல் நிலையத்தில் அவா்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
தில்லி கலவரத்தில் அவா்கள் மூவருக்கும் எதிரான வழக்கு கூடுதல் அமா்வுகள் நீதிபதி பிரவீன் சிங் விசாரித்து வந்தாா்.
இந்நிலையில் பிப்.24-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டத்தை உறுதிசெய்யும் விதாமாக அவா்களுக்கு எதிராக எந்தச் சாட்சியங்களும் இல்லை என நீதிமன்றம் கருதுகிறது. இதனால், அவா்களுக்கு எதிரான அனைத்துக் குற்றஞ்சாட்டுகளில் இருந்து மூவரும் விடுவிக்கப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான ஆதாரங்களாக பொதுப்பணித் துறையிடம் இருந்து பெற்ற சிசிடிவி காட்சிகள் இருந்தன. அவற்றில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்பது உறுதிசெய்ய தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சியங்கள் சான்றிதழில் குறைபாடுகள் இருப்பதாகவும் மீண்டும் விசாரணையின் தற்போதைய நிலையில் அவற்றை தாக்கல் செய்ய கூறுவது இந்திய சாட்சியங்கள் சட்டப் பிரிவு 65பி-க்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.