வங்கதேசத்தில் பதற்றம்; மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்பு
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால், மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், பிரதமர் பதவி விலகக் கோரி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதாகவும், அந்நாட்டு அரசை ராணுவம் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் மேற்கு வங்க எல்லையில் தீவிர கண்காணிப்புப் போடப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே வங்கதேசம் - இந்தியா எல்லைப் பகுதியான மேற்கு வங்க எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
போராட்டத்தைக் கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு ராணுவ தளபதி வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில், தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் முஜிபூர் ரகுமானின் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்.