முகப்பு
உலகம்

வங்கதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்!

வங்கதேசத்தில் இடைக்கால ஆட்சியமைத்தது அந்நாட்டு ராணுவம்

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 10:43 AM
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி - Rajib Dhar
பகிர்:

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிய நிலையில், நாட்டை விட்டு வெளியேறிதாகவும், வங்கதேச இடைக்கால அரசை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியதாகவும் ராணுவ தளபதி அறிவித்தார்.

வங்கதேசத்தில் போராட்டக்காரர்களின் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அந்நாட்டு ராணுவமும் உறுதி செய்துள்ளது. எனினும், ஷேக் ஹசீனா, எந்த நாட்டுக்குச் சென்றுள்ளார் என்பது தெரியவரவில்லை.

மேலும், வங்கதேச பிரதமர் நாட்டை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, இடைக்கால அரசை ராணுவம் அமைத்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களுக்கு வங்கதேச ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement

போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும், போராட்டத்தைக் கைவிட்டு ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தளபதி கேட்டுக்கொண்டார்.

வங்கதேசத்தில் ராணுவமே இடைக்கால அரசுப் பொறுப்பை ஏற்று நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்குப் புறப்பட்டதாகவும் அந்நாட்டு நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பான விடியோக்களும் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

மேலும், அவர் மேற்கு வங்கத்துக்கோ, பின்லாந்துக்கோ சென்றிருக்கலாம் என்றும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், முன்னெச்சரிக்கையாக, பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றுவிட்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஆட்சியில் உள்ள அவாமி லீக் கட்சி ஆதரவாளா்கள், போராட்டக்காரா்கள் மற்றும் காவல் துறையினா் இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் காவல் துறையினா் உள்பட 98 போ் உயிரிழந்தனா்; நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா்.

இதற்கிடையே ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் தந்தை என போற்றப்படுவருமான முஜிபூர் ரகுமானின் சிலையை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். ஷேக் ஹசீனாவின் கட்சியினருக்கே, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments