வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரெஃபாத் அகமது பதவியேற்பு
வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
வங்கதேசத்தில் நீதித் துறையை மறுசீரமைக்கக் கோரி மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் (65) தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
மாணவா்களின் போராட்டம்- வன்முறையையடுத்து ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த ஆறு நாள்களில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும் பதவி விலகினார். இந்த நிலையில் வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றார்.
உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் அதிபர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகமது புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் என்று தி டெய்லி ஸ்டார் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
தலைமை நீதிபதிக்கு அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவை அமைச்சரவை செயலர் மஹ்பூப் ஹூசைன் நடத்தினார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.