என்ஜிஓ-க்கள் பெண்களைப் பணியமர்த்தக் கூடாது: ஆப்கனில் தலிபான் உத்தரவு!
பெண்களுக்கு எதிராக தலிபான்கள் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு என்ஜிஓ-க்கள் பெண்களை பணியிலமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த தலிபானின் உத்தரவைப் பெண்கள் பின்பற்றாததால், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை நிறுத்துமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (என்ஜிஓ) தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தலிபான்கள் இன்று வெளியிட்ட கடிதத்தில், ’இந்த உத்தரவிற்கு இணங்கத் தவறினால், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படுவதற்கான உரிமத்தை இழக்க நேரிடும்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | வீடுகளில் ஜன்னல் வைக்க ஆப்கன் அரசு தடை!
ஒத்துழைப்பு இல்லாத பட்சத்தில், அந்த நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளும் ரத்து செய்யப்படும்’ என்று எச்சரித்துள்ளனர்.
மேலும், தலிபான்கள் கட்டுப்பாட்டில் இல்லாத நிறுவனங்களில் பணிபுரிவதை நிறுத்துமாறும் பெண்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் செயல்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்தனர்.
இரு மாதங்களுக்கு முன்னர், பெண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் தொழுகை நடத்தும்போது, ஒருவர் குரலை மற்ற பெண்கள் கேட்கும் வகையில் சப்தமாக குரானை ஓதக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிச் செல்வது முதல் பெண்களுக்கு பல்வேறு தடைகளை பிறப்பித்தனர். இது, ஐ.நா.வின் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. ஆனாலும், தலிபான்களால் பெண்களுக்கு எதிராக விதிக்கப்படும் தடைகள் தொடர்ந்து வருகின்றது.