உக்ரைனுக்கு 51 டாலர் நிதியளித்த பெண் கைது!
உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக 33 வயது பெண் ரஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷியாவில் உக்ரைனுக்கு நிதி திரட்டியதாகவும், சமூக வலைதளத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக பதிவுகளைப் பகிர்ந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஷியா, அமெரிக்கா என இரட்டைக் குடியுரிமைப் பெற்றுள்ள க்சேனியா கரெலினா எனும் பெண்ணை தேச துரோக குற்றத்தின் கீழ் ரஷியாவின் மத்திய பதுகாப்பு அமைப்பு கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் கண்கள் கட்டப்பட்டு, அதிகாரிகளால் குறுகிய பாதை வழியாக அழைத்துச் செல்லப்படும் காணொலி வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
உக்ரைன் ராணுவத்திற்கு நிதி திரட்டியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இவரை ரஷியாவின் யெகடெர்ன்பெர்க்கில் கைது செய்துள்ளனர். 51.80 டாலர் நிதியை அவர் திரட்டியதாகக் ரஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்திய மதிப்பில் தோராயமாக 4,500 ரூபாய்.
மேலும், அமெரிக்காவில் உக்ரைனுக்கு ஆதரவான நிகழ்த்தப்பட்ட பொதுக்கூட்டங்களில் அவர் கலந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷியாவில் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அவர் சமூக வலைதளங்களில் உக்ரைனுக்கு ஆதரவாக பதிவிட்டிருக்கலாம் எனவும் அதைக் குற்றமாக ரஷியா கருதுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைதளங்களில் இது போன்ற விசயங்களைப் பதிவிடுவதற்கு முன்னாலும், போரில் பிற நாடுகளுக்காக நிதி திரட்டுவதற்கு முன்னாலும் நூறு முறை யோசியுங்கள் என ரஷிய பத்திரிக்கையாளர் ஃபியோடர் க்ரெஷேனினிகோவ் கூறியுள்ளார்.