முகப்பு
உலகம்

வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சரமாரி தாக்குதல்!

ஹிஸ்புல்லா தாக்குதலால் இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம்

Updated On : 4 ஜூலை, 2024 at 1:33 PM
ஹிஸ்புல்லா தாக்குதலில் உருவான தீயை அணைக்க முயற்சிக்கும் இஸ்ரேலிய வீரர்கள்
பகிர்:

ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக் குழு, ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் வடக்கு இஸ்ரேலின் மீது வியாழக்கிழமை காலை சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளது.

அப்பர் கலீலி, கோலன் ஹெயிட்ஸ் மற்றும் கடலோர நகரமான அக்கோ மற்றும் நஹாரியா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.

லெபனான் நாட்டை சேர்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா 200 ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஒருமணி நேரத்தில் ஏவியதாக தெரிவித்துள்ளது. அக்கோ மீது பாய்ந்த ஏவுகணையின் பாகம் சிதறியதில் வணிக வளாகம் சேதமடைந்துள்ளது.

‘வடக்குக்காக போராடுவோம்’ என்கிற வடக்கு இஸ்ரேலில் இருந்து இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்களுக்கான உரிமை மீட்புக் குழு இஸ்ரேல் அரசு, ஹிஸ்புல்லாக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதுகாப்பாக இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் திரும்ப வழி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிரிழந்த ஹிஸ்புல்லா தளபதி முகமது நமே நாஸரின் உடலை ஏந்திச் செல்லும் படையினர்

தெற்கு லெபனான் நகரான டயர் மீது இஸ்ரேல் வான்வழி படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியதில் முகமது நமே நாஸர் உயிரிழந்தார். இவர் ஹிஸ்புல்லாவின் ஒரு படைப்பிரிவை தலைமை தாங்கியவர்.

நள்ளிரவில் இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை தகர்த்தன.

அக்டோபர் போர் தொடங்கியபோது 60 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் வடக்கில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். ஹிஸ்புல்லா படையினர் காஸாவுக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் இருதரப்புக்கு இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. ஹிஸ்புல்லா தாக்குதலில் மக்கள் 10 பேர் மற்றும் வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →