ஹிஸ்புல்லா படையின் மூத்த தலைவரைக் கொன்ற இஸ்ரேல்!
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவரை இஸ்ரேலிய ராணுவம் கொன்றது குறித்து...
லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையின் முக்கிய தலைவர் ஒருவர் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படைக்கு எதிரான அந்நாட்டின் மீது கடந்த மார்ச் 2 அன்று முதல் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த புதன்கிழமை (ஏப். 8) அன்று இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், பெய்ரூட் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நயீன் காசெமின் நெருங்கிய உறவினரும், ஆலோசகருமான அலி யூசஃப் ஹர்ஷி என்பவர் கொல்லப்பட்டதாக, வியாழக்கிழமை அன்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் வடக்கு மாகாணங்களின் பாதுகாப்பிற்காக லெபனானின் ஹிஸ்புல்லா படைகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும், அப்பாஸியே எனும் கிராமத்தின் மீது இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், பெய்ரூட்டில் வெறும் 10 நிமிடங்களில் 100-க்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்தத் தாக்குதல்கள் மக்கள் குடியிருப்புகள் அதிகம் நிரம்பிய பகுதியில் நடத்தப்பட்டதால் 890-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பதிலடியாக இஸ்ரேலின் வடக்கு மாகாணங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.