லெபனானில் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்!
லெபனானில் இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல்கள் பற்றி...
தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லெபனானில் மஜ்தல் செல்ம், காஃப்ரா, ஹன்னியா, டோலின், அட்லோன் நகரங்களின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நபேத்தியா நகரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் மீதும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், லெபனான் எல்லையில் உள்ள நகரங்களான தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறப்படுகின்றது.
லெபனான் முழுவதுமுள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் என்று இஸ்ரேல் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பல தளங்களின் மீது நேற்று (மார்ச் 27) ஒரே இரவில் தாக்குதல் நடத்தி அந்த அமைப்பின் இரு மூத்த உறுப்பினர்களைக் கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லெபனானின் டெபெல் பகுதியில் பதுங்கியிருந்த இஸ்ரேலிய எதிரிப் படையின்மீது டிரோன் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாக ஹிஸ்புல்லா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு தலைமையகத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.