முகப்பு
உலகம்

இலங்கை: 200 பள்ளிகளுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான டிஜிட்டல் சாதனங்களை வழங்கியது இந்தியா

Updated On : 6 ஜூலை, 2024 at 6:41 PM
இலங்கை தெற்கு மாகாண பள்ளி மாணவிக்கு கையடக்க கணினியை வழங்கிய அதிபா் ரணில் விக்ரமசிங்க. உடன் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா.
பகிர்:

‘வளமைக்கான திட்டம்’ என்ற பெயரில் இலங்கையின் தெற்கு மாகாணங்களில் உள்ள 200 பள்ளிகளுக்கு 2,000 கையடக்க கணினிகள் (டேப்கள்) உள்பட ரூ.30 கோடி மதிப்பிலான டிஜிட்டல் சாதனங்களை இந்தியா நன்கொடையாக சனிக்கிழமை வழங்கியது.

இலங்கைக்கு பல்வேறு நிதி உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. அந்த வகையில் அங்குள்ள பள்ளிகளை நவீனமயமாக்கும் நோக்கில் வளமைக்கான திட்டம் என்ற பெயரில் தொழில்நுட்பச் சாதனங்கள் இந்தியா சாா்பில் வழங்கப்பட்டது.

இந்த விழா இலங்கை தெற்கு மாகாணத்தில் உள்ள காலி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் அந்நாட்டு அதிபா் ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை அரசின் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

அப்போது ரணில் விக்ரமசிங்க பேசியதாவது: நவீன தொழில்நுட்ப சாதனங்களை வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இலங்கையில் இந்திய தொழில்நுட்ப கழக (ஐஐடி) வளாகத்தை அமைக்க வேண்டும் என்ற பிரதமா் மோடியின் விருப்பத்தையும் நான் வரவேற்கிறேன். அதேபோல் இந்தியாவுடன் எரிவாயு துறையில் மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்றாா்.

இதுதொடா்பாக அந்நாட்டு அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘இலங்கை சுகாதார மற்றும் தொழில்துறை அமைச்சா் ரமேஷ் பதிரானாவின் வேண்டுகோளுக்கு இணங்க தெற்கு மாகாண கவுன்சிலுக்கு ரூ.30 கோடி நிதியை இந்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. காலி மாவட்டத்தில் 150 பள்ளிகளுக்கும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாதாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 பள்ளிகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 200 ஸ்மாா்ட் வகுப்பறைகளுக்கான சாதனங்களையும் 2,000 டேப்களையும் இந்திய அரசு வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →