உக்ரைன் போருக்கு முடிவு: ரஷிய உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும்: அமெரிக்கா
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷியா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா திங்கள்கிழமை தெரிவித்தது.
மில்வாகீ: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷியா உடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா திங்கள்கிழமை தெரிவித்தது.
இதுதொடா்பாக அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித்தொடா்பாளா் மேத்யூ மில்லா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ரஷியாவுடனான இந்தியாவின் உறவு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த உறவை பயன்படுத்தி உக்ரைனுக்கு எதிரான சட்டவிரோத போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நீதி மற்றும் அமைதியை நிலைநாட்ட ரஷிய அதிபா் புதினிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.
ஐ.நா. சாசனம், உக்ரைனின் பிராந்திய ஒற்றுமை, இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று புதினிடம் இந்தியா அறிவுறுத்த வேண்டும். இதைச் செய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தும்’ என்றாா்.
இதேபோன்ற கருத்தை ரஷியாவில் இருந்து பிரதமா் மோடி புறப்பட்டவுடன் மில்லா் கூறினாா். கடந்த ஜூலை 8, 9-ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாகப் பிரதமா் மோடி ரஷியா சென்றது நினைவுகூரத்தக்கது.