இத்தாலிய பிரதமரை கேலி செய்தவருக்கு அபராதம்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவக் கேலி செய்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
ஜியூலியா கோர்டீஸ் என்ற பத்திரிக்கையாளர், இத்தாலிய பிரதமர் மெலோனியை உருவக் கேலி செய்ததற்காக நீதிமன்றம் இழப்பீடு வழங்க தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜியூலியா கோர்டீஸ், முன்னாள் பாசிச தலைவர் முசோலினியின் படத்துடன் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஜியார்ஜியா மெலோனியின் சித்தரிக்கப்பட்ட படத்தைச் சேர்த்து வெளியிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கோர்டீஸ் தனது எக்ஸ் பதிவில், ``ஜியார்ஜியா மெலோனி, நீங்கள் என்னை பயமுறுத்த வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் 1.2 மீ (4 அடி) உயரம் மட்டுமே. உங்களைப் பார்க்கக் கூட முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.
Advertisement
இதனையடுத்து, கோர்டீஸ் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, 1,200 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.
இருப்பினும், மெலோனியின் உயரம் 1.58 மீ முதல் 1.63 மீ வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கோர்டீஸின் பதிவால் கோபமடைந்த மெலோனி, அந்த பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தார். தற்போது அந்த வழக்கை விசாரித்த மிலன் நீதிமன்றம், கோர்டீஸ் உருவக் கேலி செய்தததால் மெலோனிக்கு இழப்பீடாக கோர்டீஸ் 5,000 யூரோக்கள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
மேலும், மெலோனிக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக மெலோனியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.