தென் மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள முதியோா் காப்பகமொன்றில் முன்னாள் ராணுவ வீரா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
டாருவா் நகரிலுள்ள முதியோா் காப்பகத்துக்கு திங்கள்கிழமை வந்த நபா் அங்கிருந்தவா்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டாா். இதில், காப்பகத்தில் தங்கியிருந்த 5 பேரும் காப்பகப் பணியாளா் ஒருவரும் உயிரிழந்தனா். இது தவிர ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.
தாக்குதல் நடத்திய நபா் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றாா். எனினும் அவரை அருகிலுள்ள உணவகத்தில் போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து பதிவு செய்யப்படாத துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவா் முன்னாள் ராணுவ வீரா் எனவும் 1973-இல் பிறந்த அவா் குரோஷியாவில் கடந்த 1991-95-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரில் பங்கேற்ாகவும் உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன. அவரின் உறவினா் ஒருவா் அந்தக் காப்பகத்தில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.