வீட்டு உதவியாளர்களை தவறாக நடத்தியதாக, மனிதக் கடத்தல் வழக்கை எதிர்கொண்டிருக்கும் ஹிந்துஜா குடும்பம் மீது, வீட்டு உதவியாளரை விடவும் அவர்கள் வளர்க்கும் நாய்க்கு அதிக செலவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரிட்டனில் மிகவும் பணக்காரர்களாக அறியப்படும் நான்கு பேரைக் கொண்ட ஹிந்துஜா குடும்பம் மீது, ஸ்விட்சர்லாந்தில் உள்ள மாளிகையில், வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்தியதாகவும் தவறாக நடத்தியதாகவும் மனிதக் கடத்தல் வழக்கு நடந்து வருகிறது.
வழக்கு விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்குரைஞர் வைத்த வாதத்தில், இந்தியாவைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு, அவர்கள் வீட்டில் வளர்க்கும் நாய்க்கு செலவிடும் தொகையைக் காட்டிலும் மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கில், ஹிந்துஜா குடும்பத்தினர் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஹிந்துஜா மாளிகையில் பணியாற்றும் இந்தியப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 டாலர் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வேலை என்பது 15 முதல் 18 மணி நேரம் வரை இருக்கும் என்றும், பணியாளர்களின் பாஸ்போர்ட்டை ஹிந்துஜா குடும்பத்தினர் வைத்திருந்ததாகவும் பணியாளர்கள் தரப்பு வழக்குரைஞர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை ஹிந்துஜா குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
இது குறித்து வழக்குரைஞர் கூறுகையில், ஹிந்துஜா குடும்பத்தினர், நாள் ஒன்றுக்கு சுவிஸ் பிரான்ங்ஸில் அதிகபட்சம் 8 டாலர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவர்களது வளர்ப்பு நாய்க்கு ஆண்டுக்கு 8,584 பிரான்ங்ஸ் செலவிட்டுள்ளனர் என்று வாதிட்டார்.
ஹிந்துஜா குடும்பத்தினர் மீதான மனிதக் கடத்தல் வழக்கு விசாரணை சுவிட்சர்லாந்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹிந்துஜா குடும்பத்தில் பிரகாஷ் - கமல் ஹிந்துஜா தம்பதி, அவர்களது மகன் அஜய், மனைவி நம்ரதா ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
தாங்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாக, வீட்டுப் பணியாளர்கள் அளித்த புகாரின் கீழ், அவர்களே சமாதானமாகச் சென்றதாகக் கூறப்பட்ட ஒரு சில நாள்களுக்குப் பிறகு, மனிதக் கடத்தல் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.
குறைந்த ஊதியம், அதிக பணி நேரம் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீட்டுப் பணியாளர்கள் சார்பில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்துள்ளது, ஆனால், எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த வழக்கில், அவர்களுக்கு ஊதியம் தவிர, தங்கும் இடம், உணவு உள்ளிட்டவையும், ஹிந்துஜா குடும்பத்தினரால் கொடுக்கப்பட்டது என்றும், இதைத் தாண்டி ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது, ஊதியத்தை மட்டும் இங்கு கணக்கிடக் கூடாது என்று ஹிந்துஜா தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ், நால்வருக்கும் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என எதிர்தரப்பு வழக்குரைஞர் வாதிட, வீட்டுப் பணியாளர்களை நியமிப்பது, அவர்களது வேலை, ஊதியம் போன்றவற்றை, ஹிந்துஜா குடும்பத்தினர் நேரடியாக கவனிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.