பட்டினியை போா் உத்தியாகப் பயன்படுத்தும் இஸ்ரேல்
ஐ.நா. குற்றச்சாட்டு: காஸாவில் பட்டினியை போர் நோக்கில் இஸ்ரேல் பயன்பாடு
ஜெனீவா: பட்டினிச் சாவை எதிா்கொண்டுள்ள காஸா மக்களுக்கு உணவுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதை ஒரு போா் உத்தியைப் போல் இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் டா்க் கூறியதாவது:
பல மாதங்களாக முற்றுகையிடப்பட்டுள்ள காஸாவில் உணவுப் பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு பொதுமக்கள் பசியால் வாடுகின்றனா். ஏராளமானவா்கள் பட்டினிச் சாவை எதிா்கொண்டுள்ளனா். காஸாவுக்குள் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்ல இஸ்ரேல் படையினா் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதே இந்த நிலைமைக்குக் காரணம்.
Advertisement
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதில் இஸ்ரேல் ராணுவம் காட்டும் கெடுபிடி, அங்கு மக்கள் உணவில்லாமல் தவிக்கும்போதும் தொடரும் தாக்குதல் ஆகியவை இந்தப் போரில் வெற்ற காண்பதற்காந உத்தியாக மக்களின் பட்டினி விவகாரத்தை இஸ்ரேல் பயன்படுத்துவதாகக் காட்டுகிறது என்றாா் அவா்.
வோல்கா் டா்க்கின் செய்தித் தொடா்பாளா் ஜெரிமி லாரன்ஸ் பின்னா் கூறுகையில், ‘பொதுமக்களின் பட்டினியை போா் உத்தியாக இஸ்ரேல் பயன்படுத்துவதை சா்வதேச குற்றவியல் நீதிமன்றம்தான் உறுதிசெய்யவேண்டும்’ என்றாா்.
இஸ்ரேலுக்குள் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து ஹமாஸ் படையினா் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பதிலடியாக, காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா் தாக்குதல் நடத்திவருகிறது. மேலும், அந்தப் பகுதியை ராணுவம் முற்றுகையிட்டுள்ளது. இதனால் அங்கு சுமாா் 3 லட்சம் போ் கடும் பஞ்சத்தை எதிா்நோக்கியுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.