பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!
இஸ்ரேல் தாக்குதல்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தல்...
லெபனான் மீதான போரில், அந்நாட்டைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தெற்கு லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில், அல் மனார் எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் அலி ஷோயப் கடந்த மார்ச் 28 அன்று கொல்லப்பட்டார்.
அலி ஷோயபின் கொலைக்குப் பொறுப்பேற்ற இஸ்ரேல் ராணுவம் அவர் ஹிஸ்புல்லாவின் ராத்வான் பிரிவில் செயல்பட்டு வந்ததாகக் குற்றம்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதேபோல், அல் மயாதீன் நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஃபுதூனி மற்றும் அவரது சகோதரரும், ஒளிப்பதிவாளருமான முகமது ஃபுதூனி ஆகியோரைக் கொன்றதாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் ராணுவம், அவர்களும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையில் இயங்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. நிபுணர்கள் வியாழக்கிழமை (ஏப். 2) அன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி, அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பத்திரிகையாளர்களைக் குறிவைத்துக் கொல்வதையும், பின்னர் அதற்கு நம்பத்தகுந்த ஆதாரத்தையும் வழங்காமல் அவர்கள் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று கூறுவதையும் இஸ்ரேல் தற்போது ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, காஸா மற்றும் லெபனானில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் தாக்குதல்களில் 231 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில், காஸாவில் மட்டும் 210 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
UN experts have urged that an international investigation be conducted into the killing of three Lebanese journalists by Israel.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.