கடும் குடிநீர் பஞ்சத்தால் அவதிப்படும் மாலத்தீவுக்கு, திபெத் பனிமலைகளில் இருந்து 1,500 டன் குடிநீரை சீனா அளித்ததாக மாலத்தீவு அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த முடிவு சீனாவின் திபெத் தன்னாட்சி மண்டல தலைவர் யான் ஜின்ஹாய், மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முயீஸை கடந்த நவம்பரில் சந்தித்த போது எடுக்கப்பட்டதாக மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1500 டன் குடிநீர் மாலத்தீவுக்கு வந்து சேர்ந்ததாக எடிஷன்.எம்வி என்கிற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
திபெத்தில் உயர்ரக தயாரிப்பு நிறுவனங்கள் குடிநீர் உற்பத்தி செய்கின்றன. சுத்தமான, தெளிவான, அதிக கனிமங்கள் கொண்ட நீர் திபெத் பனிப்பாறைகளில் இருந்து பெறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு ஆதரவான அரசு மாலத்தீவில் அமைந்ததுமுதல் சீனா பல்வேறு வகைகளில் மாலத்தீவுக்கு உதவி அளித்து வருகிறது.
மார்ச்சில் மாலத்தீவு அதிபர் முயீஸ், சீனா அபாயகரமில்லாத ஆயுதங்கள் மற்றும் ஆயுத பயிற்சியை மாலத்தீவுக்கு இலவசமாக வழங்கவிருப்பதாக தெரிவித்தார்.
2014-ல் மாலத்தீவு குடிநீர் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தின்போது கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. மாலத்தீவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா பல்வேறு தவணைகளில் மாலத்தீவுக்கு குடிநீர் அனுப்பியது.